
(பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தாரகேஷ்வரில் இருந்து பிஎம் கிசான் திட்டத்தின் 23ஆவது தவணையை ஜூன் 20ஆம் தேதியன்று, நாளை வெளியிடுகிறார். நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்நிகழ்ச்சியில் நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ பங்கேற்கிறார்கள். இந்த 23ஆவது தவணையின் கீழ், 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ. 18,880 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடியாக மாற்றுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயனடையும் 2.18 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகளும் இதில் அடங்குவர். 2019ஆம் ஆண்டின் ப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. 23ஆவது தவணை வெளியிடப்பட்ட பிறகு, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 4.46 லட்சம் கோடியைத் தாண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்குத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வேளாண் அறிவியல் மையங்கள் (KVK), கிராம ஊராட்சிகள், வேளாண் சந்தைகள் மற்றும் பிற நிறுவனங்கள் இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. மேலும் இந்நாள் "பிஎம் கிசான் கொண்டாட்ட நாள்" (PM-KISAN Celebration Day) ஆகக் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் போது, மேற்கு வங்காளத்தில் 'பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்' (PMFBY) மற்றும் 'வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம்' (RWBCIS) ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இயற்கை பேரிடர்கள், வானிலை மாற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதே இத்திட்டங்களின் நோக்கமாகும்.2026-27ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் சுமார் 11 மில்லியன் விவசாயிகளுக்குக் காப்பீட்டு வசதியை அளிக்கவும், இதன் மூலம் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்களையும் ரூ. 28,140 கோடி மதிப்பிலான பயிர்களையும் பாதுகாக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இம்முறை, மேற்கு வங்கத்தில் 4.535 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் 907 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெறவுள்ளனர். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மாநில விவசாயிகளுக்கு மொத்தம் 15,055 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.'டிஜிட்டல் விவசாயத் திட்டத்தின்' (Digital Agriculture Mission) ஒரு பகுதியாக பிரதமர் மேற்கு வங்கத்தில் 'அக்ரிஸ்டாக்' (AgriStack) தளத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார். இது ஒரு டிஜிட்டல் தளமாகச் செயல்படும். இதன் மூலம் விவசாயிகள் உர விநியோகம், கிசான் கிரெடிட் கார்டுகள், நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான சேவைகளை எளிதாகப் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 'இயற்கை விவசாயத்திற்கான தேசிய இயக்கம்' (NMNF) தொடங்கப்படவுள்ளது. ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும், பாரம்பரிய மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2026-27ஆம் ஆண்டுக்குள் மேற்கு வங்கத்தில் 17,300 ஹெக்டேர் பரப்பளவில் 346 இயற்கை விவசாயக் குழுக்கள் (clusters) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 43,250 விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் மேற்கு வங்கத்தில் 'பிரதான் மந்திரி தன் தான்ய கிருஷி யோஜனா' (PMDDKY) திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார். விவசாய உற்பத்தித் திறன் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. மேற்கு வங்கத்தின் புருலியா, டார்ஜிலிங், அலிபுர்துவார் மற்றும் ஜார்கிராம் ஆகிய மாவட்டங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.நீர்ப்பாசன வசதிகளை வலுப்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், விவசாய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கான நிதி வசதி ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
