நேபாள எல்லை வழியாக சீனாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இரு பெண்கள் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காமல் மாயமாகியுள்ள சம்பவம், அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் காணாமல் போய் பல நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் விடை தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறியபடி கூறுகையில், “சீன அரசிடம் இருந்து எங்களுக்குத் தெளிவான தகவல் தேவை. காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் என அனைவரின் விவர அடங்கிய பட்டியலை சீன அரசு உடனடியாக வெளியிட வேண்டும். எங்களது அன்புக்குரியவர்களைப் பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய நாங்கள் துடித்துக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும், “தகவல் எதுவும் கிடைக்காததால் நாங்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்து வருகிறோம். எந்நேரமும் தொலைபேசியையே பார்த்துக் கொண்டு, ஏதேனும் நல்ல செய்தி வராதா என ஏங்கித் தவிக்கிறோம்” என்று அவர்கள் தங்களின் வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச எல்லையில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து வெளியுறவுத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.