ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உட்பட நான்கு திருக்கோயில்களின் சமயப் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்ட 21 ஏக்கர் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிலர் விதிமுறைகளை மீறி, ‘ஜி ஸ்கொயர்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு இந்த நிலத்தை முறைகேடாக விற்க முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம் விளக்கம் அளித்துள்ளார். அதில், தங்களது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றியே செயல்பட்டு வருவதாகவும், நிலத்தின் ஆவணங்களைச் சரியாகச் சரிபார்த்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை நிலைநாட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோயில் நில விவகாரத்தில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கை தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.