தாம்பரம்: முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனித்து வரும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில், பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு முறைப்படி ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்படுவதற்கு முன்பாகவே, பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு விதிகளையும் நடைமுறைகளையும் முற்றிலும் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல்பாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றடைந்தன.
இப்புகார் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தனது பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் உள்ள துறையிலேயே இத்தகைய முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ள சம்பவம் தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.