ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி காதலித்து வந்துள்ளான். காதலியை நேரில் சந்திக்க தீவிர விருப்பம் கொண்ட அந்தச் சிறுவன், பெற்றோருக்குத் தெரியாமல் இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளான்.
இதற்காகத் தமிழகத்தின் கடலோரப் பகுதிக்குச் சென்ற சிறுவன், தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கூலியாகக் கொடுத்து, சட்டவிரோதமாகப் படகில் இலங்கையின் மன்னார் பகுதிக்குச் சென்று சேர்ந்துள்ளான். அங்கு சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித்திரிந்த அச்சிறுவனை இலங்கை கடற்படையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பேஸ்புக் காதலியைச் சந்திக்கவே ஈரோட்டில் இருந்து ஆபத்தான முறையில் கடல் கடந்து வந்ததாகச் சிறுவன் கூறியதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த தமிழகக் காவல்துறையினர், சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டுக் தாயகம் அழைத்துவர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.