
மத்திய அரசின் முடிவால் மாறிய சூழல்!
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் வருவதற்கான முக்கிய காரணமாக மத்திய அரசின் சமீபத்திய முடிவு கருதப்படுகிறது. ஜூன் 6ஆம் தேதியன்று மத்திய அரசு கடன் பத்திரங்கள் மீதான வெளிநாட்டு முதலீடுகளுக்கான நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரிகளை (capital gains taxes) ரத்து செய்தது. இதனுடன், வட்டி வருமானம் மீதான 'வித்ஹோல்டிங்' வரியும் (withholding tax) நீக்கப்பட்டது. முன்னதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 12.5 சதவீதமும், குறுகிய கால ஆதாயங்களுக்கு 30 சதவீதமும், வட்டி வருமானத்திற்கு 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டியிருந்தது. இந்த வரிகள் நீக்கப்பட்டதால் இந்திய கடன் பத்திரங்களின் ஈர்ப்புத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ரூபாய் மற்றும் கடன் பத்திர வருவாய்!
அதிகரித்த வெளிநாட்டு முதலீட்டின் தாக்கம் இந்திய நாணயம் மற்றும் கடன் பத்திரச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ஜூன் மாதத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 சதவீதம் வலுவடைந்தது. அதேவேளையில், 10 ஆண்டு கால அரசு கடன் பத்திரத்தின் வருவாய் 7 சதவீதத்திலிருந்து 6.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அரசின் கடன் வாங்கும் செலவைக் குறைப்பதோடு, நிதி ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் மேலும் வரும்!
வரிச் சலுகைகள் மற்றும் பிற சீர்திருத்தங்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கடன் பத்திரச் சந்தைக்கு 45 பில்லியன் முதல் 50 பில்லியன் டாலர் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படலாம் என்று சந்தை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், FAR-இன் கீழ் கூடுதல் அரசுப் பத்திரங்களைச் சேர்ப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
