பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் புதிய பிராந்திய ராணுவக் கூட்டணியில், இரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைவது குறித்த விவாதங்கள் சர்வதேச அளவில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளன. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழலுக்கு மத்தியில் இந்த கூட்டணி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், இந்த கூட்டணியில் இணைவது தொடர்பாக இரான் தரப்பில் ஒரு முதன்மையான நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இத்தகைய சர்வதேச ஒப்பந்தங்களில் இரானும் எகிப்தும் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதால், வெறும் சாதாரண உறுப்பினர்களாக இணைய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக, இணை நிறுவன உறுப்பினர்களாகவே (Co-founding members) பங்கேற்போம் என்றும், கையெழுத்திடப்படும் கொள்கை ஆவணங்களை உருவாக்கும் போதே தங்களது கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இரான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இரானின் இந்த அதிரடி நிபந்தனை உலக அரசியல் அரங்கில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.