பிரபல தொழிலதிபர் சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜீ குழுமத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா செலுத்த வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட மொத்தக் கடன் தொகை ₹22,006.57 கோடியாகும். இந்த பிரம்மாண்ட கடனை அடைப்பதற்காக, கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு வெறும் ₹6.25 கோடியும், திவால் நடவடிக்கைகளுக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் சேர்த்து மொத்தம் ₹6.5 கோடி மட்டுமே வழங்குவதாக ஒரு தீர்வுத் திட்டம் முன்மொழியப்பட்டது.
ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கடனுக்கு வெறும் 6.5 கோடி ரூபாய் மட்டுமே திருப்பிச் செலுத்த முன்வந்தது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சொற்ப தொகையை ஏற்கும் தீர்வுத் திட்டத்தின் செல்லுபடித்ன்மை மற்றும் கடன் அளித்தவர்களின் உரிமைகள் குறித்து என்சிஎல்டி விரிவாக ஆய்வு செய்து வருகிறது. இத்தகைய பெரிய அளவிலான நிதி இழப்பு மற்றும் திவால் நடைமுறைகள் நாட்டின் நிதித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.