தாயின் ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து பெறுவதற்காக, இறந்த தனது தாயின் உடலை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த நபருக்கு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயார் இயற்கை எய்திய பிறகும், அதனை அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்த அந்த நபர், தாயின் பெயரில் வந்து கொண்டிருந்த பென்ஷன் பணத்தை சட்டவிரோதமாகத் தொடர்ந்து பெற்று வந்துள்ளார். நீண்ட நாட்களாக அந்தப் பெண்மணியைக் காணாத நிலையில், அவரின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து ஒரு மருத்துவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த மருத்துவர் காவல்துறைக்குத் தகவல் அளித்ததன்பேரில், அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் மகன் தன் சுயநலத்திற்காகச் செய்த இந்தக் கொடூர செயல் அம்பலமானது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.