52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
முதலமைச்சரான பிறகு முதல் சர்ப்ரைஸ் விசிட்: எழும்பூர் மருத்துவமனையில் தாய்மார்களிடம் குறைகளைக் கேட்டறிந்த விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரம் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய சில நாட்களிலேயே முதலமைச்சரின் இந்த அதிரடி விசிட் நடந்துள்ளது.

எழும்பூரிலுள்ள தாய்சேய் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் யில் முதலமைச்சர் மேற்கொண்டது முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரு திடீர் ஆய்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது, அங்கிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்துக் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய் வார்டுகளுக்கு நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளின் தாய்மார்களுடன் கலந்துரையாடினார். அரசு வெளியிட்டுள்ள புகைப்படங்களில், முதலமைச்சர் விஜய் பிறந்த குழந்தைகளைக் கையில் ஏந்தி கொஞ்சுவதும், அவர்களின் தாய்மார்களிடம் குறைகளைக் கேட்பதும், மருத்துவப் பணியாளர்களுடன் ஆலோசிப்பதும் பதிவாகியுள்ளது.

சமூக ஊடக வீடியோவால் வந்த அதிரடி:

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் லஞ்சம் கேட்பதாகவும், நோயாளிகளுக்குச் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துத் தமிழக சுகாதாரத்துறை கூறும்போது லஞ்சப் புகாரில் தொடர்புடைய தற்காலிக ஊழியர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாகக் கழிப்பறைகள், புதிய வார்டுகள் மற்றும் கேண்டீன் வசதி அமைத்துக் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

கூடிய ஆதரவாளர்கள் - அரசியல் முக்கியத்துவம்:

முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வுக்காக மருத்துவமனைக்கு வந்த தகவல் பரவியதும், அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் ஆதரவாளர்களும் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே திரண்டனர். இதனால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கூட்டம் நெறிமுறைப்படுத்தப்பட்டது.முதலமைச்சரின் இந்த அதிரடி விசிட் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைக்க, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆதரவுதான் முக்கியக் காரணமாக இருந்தது. இதனால், தனது முக்கிய வாக்கு வங்கியான பெண் வாக்காளர்களின் புகாருக்கு முதலமைச்சர் விஜய் உடனடியாக நேரில் சென்று தீர்வு கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *