முதல்வர் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று கரூருக்கு சென்றார். அங்கு மக்கள் சந்திப்புக்கு பின்பாக கரூர் மாவட்ட அலுவகத்திற்கு சென்றார். இதனையடுத்து கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் விஜய். இந்நிலையில் இது சம்பந்தமாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சென்னை வர வைத்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். இதனையடுத்து தற்போது கரூருக்கு சென்றுள்ள முதல்வர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்கியுள்ளார்.இதனிடையில் பணி ஆணை வழங்குவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆதரவு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை பகிர்ந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடமும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாத்தையும் அரசியலுடன் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எளிய மக்கள். அதில் அவர்களுடைய தவறு எதுவும் கிடையாது. நமக்கு பிடித்த ஒரு அரசியல் கட்சி தலைவர் வருகிறார் என்றால், நம்ம எல்லாரும் போய் பார்க்கத்தான் செய்வோம். இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடக்குமென யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். ஒரு எளிய சாதாரண மக்களாக தான் சென்றார்கள்.அங்கு மாபெரும் இழப்பு ஒன்றினை சந்தித்து இருக்கிறார்கள். இன்னைக்கு பல குடும்பங்கள் முறிஞ்சு கொடுக்கு. பணி நியமன ஆணை வழங்கும் போது, அங்கு யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. ஒரு இடத்தில் ஒரு தம்பி குழந்தையை அழைச்சுட்டு வர்றாரு. அங்க அந்த குழந்தை சிரிக்குது. அப்பா அழுகிறார். குழந்தை ஏப்பா ஏப்பான்னு கேட்குது. ஒரு நெருக்கடியான சூழலில் தான் அனைவரும் இருந்தார்கள். முதலமைச்சர் அவர்களும் தாங்க முடியாமல் திரும்பி நின்று அழுதார்கள்.அப்படித்தான் கொடுக்கிறவங்க, வாங்குறவங்க ரெண்டு பேருக்குமே ஒரு கஷ்டமான நிலை. இது விதிமீறல் கிடையாது. தகுதி, திறமை பார்த்து நியாயமான வேலை தான் கொடுக்கப்பட்டு இருக்கு. இதனை மனிதாபிமானத்துடன் அணுகுங்கள். வேதனை மற்றும் வலிக்கு இந்த வேலை தீர்வாக அமையாது. ஆனாலும் ஒரு ஆதரவாக இருக்கும் என்பது நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார் ஜோதிமணி.இதற்கிடையில் பணி நியமன ஆணை வழங்குவதற்கு கம்யூனிஸ்ட் மற்றும் நாதக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை சிபிஐயில் இருக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப்பணி வழங்கினால் வழக்கின் தன்மை நீர்த்துவிடும். எனவே தவெக கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சி சார்பாகவே நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கருத்துக்களை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

