52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ஜொலிஜொலிக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் – தொடர்ந்து 5 நாட்களாக ஏற்றம்

நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸின் பங்குகள் கடந்த சில நாட்களாக அதிகளவில் வாங்கப்பட்டு வருகின்றன. இன்று, (ஜூலை 14) தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக இப்பங்கு உயர்வைக் கண்டுள்ளது. இப்பங்கு ஒரே நாளில் கிட்டத்தட்ட 4.8 சதவீதம் உயர்ந்து 535 ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சபட்ச அளவாகும். கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் இப்பங்கு 51 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய உயர்வுடன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 54,528.68 கோடியாக அதிகரித்துள்ளது.

முதல் காலாண்டு வணிக அறிக்கை!

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2026 ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வணிக அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 38 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய வணிகமும் 38 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஒரே கடையில் விற்பனை வளர்ச்சி 28 சதவீதமாக இருந்தது.

வெளிநாட்டு வணிக செயல்பாடு!

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வணிக வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், டிஜிட்டல் நகை தளமான கேண்டெரின் வருவாய் 112 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தங்க மறுசுழற்சியில் கவனம்!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் இந்தியாவில் 12 புதிய கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் 5 கேண்டெர் ஷோரூம்களைத் திறந்தது. ஜூன் 30 நிலவரப்படி, இந்நிறுவனம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மொத்தம் 524 ஷோரூம்களைக் கொண்டிருந்தது. அதன் 'ஷைன் வித் இந்தியா' தங்க மறுசுழற்சி முயற்சி நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாயில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் பங்கு 46 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் அது 55 சதவீதத்தைத் தாண்டியது.

நடப்புக் காலாண்டில் நல்ல வளர்ச்சி!

நடப்புக் காலாண்டும் வலுவாகத் தொடங்கியுள்ளதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பண்டிகை மற்றும் திருமணக் காலங்களுக்காக புதிய ஷோரூம்கள், புதிய கலெக்ஷன்கள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. உலகளாவிய தரகு நிறுவனமான சிட்டியும் இந்நிறுவனம் குறித்து நேர்மறையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் சொத்து-குறைவான மாதிரி மற்றும் ஃபிரான்சைஸ் அடிப்படையிலான விரிவாக்கம் ஆகியவை வருவாய் வளர்ச்சி மற்றும் லாபத்தை எதிர்காலத்தில் ஆதரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.Disclaimer:இங்கு வழங்கப்பட்டுள்ள செய்தி தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முதலீடு செய்வதற்கு முன் எப்போதும் நிபுணர் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *