
இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.இத்தொடருக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்ட இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், விராட் கோலியின் மூன்றாவது இடத்திற்கு, மூன்று வீரர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக அறிவித்தார்.விராட் கோலிக்கு, ஐபிஎல் 2026 பைனலில் விளையாடியபோது, தொடைப்பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டது. அந்த தசை பிடிப்பு பிரச்சினையோடுதான் பைனலில் விளையாடினார். தற்போதுவரை அந்த பிரச்சினை சரியாகாத காரணத்தினால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகிவிட்டார்.இதனைத் தொடர்ந்து, விராட் கோலிக்கு மாற்றான வீரரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்நிலையில், கோலி இல்லாத காரணத்தினால், மூன்றாவது இடம் யாருக்கு வழங்கப்படும் என பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மோர்னே மோர்கலிடம் கேள்வி எழுப்பியபோது, மூன்று வீரர்களை சுழற்சி முறையில் ஆட வைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.அதில், ‘‘விராட் கோலி இல்லாததால், அந்த இடத்தில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கே. எல். ராகுல், இஷான் கிஷன் ஆகிய மூன்று வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இது, இவர்களுக்கு அரிய வாய்ப்பு. ரெகுலர் வீரர் இல்லாத இடத்தில் திடீரென்று ஒரு வீரரை ஆட வைத்தால் எப்படி இருக்கும் என்பதை, இதன் மூலம் சோதித்து பார்க்க உள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.ஒருவேளை, இந்த மூன்று வீரர்களில் ஒருவர் மூன்றாவது இடத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார், கோலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தை நிரந்தரமாக வழங்குவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த மோர்கல், ‘‘தற்போதைய இந்திய ஒருநாள் அணியில், ஒன்டவுன் இடம் கோலிக்கானது. தற்போது அவர் இல்லை. அவரது இடத்தில் சோதனை முயற்சியை செய்ய உள்ளோம்’’ என்றார்.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், குர்னுர் பிரார் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துப் பேசிய மோர்கல், ‘‘அந்த இளம் வீரர்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறார்கள். இளம் வீரர்கள் என்பதால், அவர்கள் அழுத்தங்களுடன் இருப்பார்கள். போமிய கவுன்சிலிங் கொடுக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால், அவர்கள் எவ்வித பதற்றமும் இல்லாமல், அனுபவ வீரர்களை போல இருக்கிறார்கள். பயிற்சியின்போது, தெளிவாக, நிதானமாக செயல்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள்’’ என வியப்புடன் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, குர்னூர் பிரார் மற்றும் பிரியன்ஸ் யாதவ் இருவரில் யாருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்கும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மோர்கல், ‘‘அதனை தற்போது கூற இயலாது. இருவரும் திறமையான வீரர்கள். இருவரும் பிளேயிங் 11-ல் இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், பிட்ச் நிலவரத்திற்கு ஏற்ப, கடைசி நேரத்தில்தான் முடிவு எடுக்க முடியும்’’ என மோர்கன் கூறினார்.இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ஜூன் 13ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டி 17ஆம் தேதியும், அடுத்து மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி 20ஆம் தேதியும் நடைபெறும். ஆப்கானிஸ்தான் அணி, கடைசி 6 ஒருநாள் தொடர்களில் 5 தொடர்களில் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
