
சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. இதனையடுத்து விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையிலும் பங்கெடுத்தன. இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தான் போட்டியிடாதது குறித்து விசிக தலைவர் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் சண்முகம், சிபிஐ வீரபாண்டியன் மற்றும் ஐயூஎம்எல் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உரையாடல் நடத்தியுள்ளனர். இதில் தேர்தல் முடிவுகள், அதன்பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளனர். இந்த நேர்காணல் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.இந்நிலையில் இந்த நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவனிடம் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துவிட்டு, பின்னர் ராஜினாமா செய்தது ஏன்? ஏதேனும் புற அழுத்தம் இருந்ததா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தலுக்கு பின்பாக திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. இன்று தவெக இருக்கும் இடத்தில் திமுக இருக்குமென நினைத்தேன். அந்த சமயத்தில் குதிரை பேரம் நடக்க வாய்ப்பிருக்கு என எண்ணியதால் கட்சி தலைவர் என்ற முறையில் நான் உள்ளே இருக்க வேண்டும் என நினைத்தேன்.நான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நாள் அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். நானாக தான் அவரிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி இப்படி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், நாற்பது வருடமாக அரசியலில் இருக்கீங்க. நீங்க ஒரு தலைவர். நான் என்ன உங்கக்கிட்ட சொல்றது என்றார். நான் உங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து விட்டேன்.அதனால நீங்க இதை பார்க்குறீங்க என்று கேட்டேன். இதனை நான் கேட்பதற்கு காரணம் எங்க மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். நீங்க திடீர்ன்னு இப்படி அறிவிச்சுட்டீங்க என்று கேட்டார். எ.வ. வேலுவும் என்னை அழைத்து பேசினார். உங்களுக்கு இன்னும் மூன்று வருடம் எம்பி பதவிக்கான காலம் உள்ளது. இப்போ ரிசைன் பண்ணிட்டு காட்டுமன்னார்கோயிலில் நிக்குறீங்க. நான் உங்களுக்காக வாக்கு கேட்டு தேர்தல் வேலை செய்ய வேண்டும். அப்போது ஏன் திருமாவளவன் இப்போ ரிசைன் செய்தார் என்று கேட்கும்போது, நான் என்ன சொல்லி ஓட்டு கேட்கிறது. நீங்க சிட்டின் எம்பி. மறுபடியும் எம்பி இடைத்தேர்தலுக்கும் நம்ம வேலை பார்க்கனும். அது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே தெரியும். அது மட்டும்தான் எனக்கு சங்கடமாக உள்ளது என்றார். 2029 தேர்தலில் உங்க எம்பி பதவி முடியுது. அப்போ நீங்க உங்க எம்எல்ஏ யாரையாவது ரிசைன் பண்ண சொல்லிட்டு நில்லுங்க.அதுக்கப்புறம் தமிழ்நாடு அரசியலுக்கு வந்துடலாம். இப்போ போட்டியிட வேண்டாமென தன்னுடைய கருத்தை சொன்னார் எ.வ. வேலு. அதோடு இல்லாமல் உங்க உறவுக்காரர் யாரையாவது நிற்க வைச்சு, ரிசர்வ்ல வையுங்க. அப்போதான் நீங்க சொன்னதும் ரிசைன் பண்ணுவாங்க. நீங்க நிற்க வைக்கும் உறவுக்காரரை ஜெயிக்க வேண்டியது என்னுடைய கடமை என்றார் எ.வ. வேலு. மறுநாள் முதல்வரிடமும் இதுப்பற்றி பேசினேன்.அவர் நீங்க எட்டு தொகுதிக்கு போக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். உங்க முடிவை மறு ஆய்வு செய்யுங்க என்றார். அவ்வளவு தான். என்னை யாரும் வாபஸ் பெற சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. நானாகவே கருத்துக்கேட்டு போட்டியிட வேண்டாமென முடிவெடுத்தேன் என விரிவாக காட்டுமன்னார்கோயிலில் மனுத்தாக்கல் செய்து வாபஸ் பெற்றது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
