
தமிழ்நாடு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி பாடங்களில் 15 வருடங்களாக தற்காலிகமாக பணிபுரிகின்ற 11,773 பகுதி நேர ஆசிரியர்களை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்த பாடங்களில் சிறப்பாசிரியர்களாக பணிபுரிகின்றவர்களுக்கு 20,600 ரூபாய் என்ற காலமுறை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதே பாடங்களில் தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதி நேர ஆசிரியர்களாக தொகுப்பூதியமாக ரூ. 15,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை கலைந்து ஒரே கல்வித் தகுதி, ஒரே பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.தற்காலிகப் பணியாளர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கும் சம வேலை - சம ஊதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை தமிழ்நாடு அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால் காலமுறை சம்பளம் மற்றும் பதவி உயர்வு பெற்று இருக்க வேண்டியவர்களை முந்தைய அரசுகள் பகுதி நேர ஆசிரியர்களாகவே முடக்கிவிட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.இந்த நிலையில் தவெக தேர்தல் அறிக்கையில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்து இருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதி நேர பணிபுரிகின்றனர். எனவே 11,773 பகுதி நேர ஆசிரியர்களை அவர்கள் பணிபுரிகின்ற உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை வாழ்க்கைகல்வி, கட்டிடக்கலை, தோட்டக்கலை ஆகிய பாடங்களில் நிரந்தர ஆசிரியர்களாக காலமுறை சம்பளம் வழங்கி தவெக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.முதல்வர் விஜய் தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, முந்தைய 10 ஆண்டு அதிமுக ஆட்சியிலும் இதை அடுத்து 5 ஆண்டு திமுக ஆட்சியிலும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு செய்யவில்லை. இந்த நிலையில் தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டு தற்காலிமாக பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி பகுதி நேர ஆசிரியர்கள் 11,773 பேரையும் முதல்வர் விஜய் தங்களை நிரந்தரமாக்குவார் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இந்த நிலையில் பள்ளி கல்வித் துறையில் தற்போது 1328 உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு TRB ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தி நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் 3843 உடற்கல்வி பாட பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல ஆண்டுகளாக உடற்கல்வி பாடத்தில் மாணவர்களை ஊக்குவித்து வருகின்ற பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களை நிரந்தரமாக்கிய பிறகே காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே தங்களுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்பதே பகுதி நேர ஆசிரியர்களின் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.எனவே பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடங்களில் தற்காலிகமாக 15 ஆண்டுகளாக பணிபுரிகின்ற 3843 பேரை நிரந்தரமாக்கி தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
