
8ஆவது ஊதியக் குழுவின் செயல்முறையின் முதல் முக்கிய கட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. கருத்துருக்கள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளல் இனி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளில் எவற்றை அக்குழு தனது இறுதிப் பரிந்துரைகளில் சேர்க்கும், எவற்றை மாற்றியமைக்கும், எவற்றை நிராகரிக்கும் என்பது குறித்த கவனம் திரும்பும்.குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை உயர்த்துதல், ஃபிட்மென்ட் காரணி எனப்படும் ஊதிய நிர்ணயக் காரணியைச் சீரமைத்தல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், பழைய குடும்ப அலகு (family unit) சூத்திரத்தில் மாற்றங்கள் செய்தல் மற்றும் , NPS, UPS தொடர்பான ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை ஊழியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் அமைப்புகளும் அக்குழுவிடம் முன்வைத்துள்ளன.ஆன்லைன் மூலம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க ஜூன் 15ஆம் தேதியே கடைசி நாள் என்றும், அதற்குப் பிறகு கால நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாது என்றும் அக்குழு ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. மேலும், அச்சிடப்பட்ட ஆவணங்கள் (hard copy), மின்னஞ்சல் அல்லது PDF வடிவில் சமர்ப்பிக்கப்படும் கருத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அக்குழு தெரிவித்திருந்தது.குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதற்கான கோரிக்கை எதிர்கொள்ளும் மிக முக்கியமான விவகாரம் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பானதாகும். தற்போதைய ஊதிய முறை காலாவதியான நுகர்வு முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், நவீன குடும்பங்களின் உண்மையான தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை என்றும் ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன.தற்போதைய ஊதியக் கணக்கீட்டு முறை இன்றைய குடும்பங்களின் உண்மையான தேவைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பு (AINPSEF) தனது மனுவில் தெரிவித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு, தரமான கல்வி, வீட்டுவசதி, டிஜிட்டல் இணைப்பு, போக்குவரத்து மற்றும் வயதான பெற்றோரைப் பராமரித்தல் போன்ற செலவுகள் அரசு ஊழியர்களுக்கு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.தற்போதுள்ள 'மூன்று பேர் கொண்ட குடும்ப அலகு' என்ற சூத்திரத்தை 'ஐந்து பேர் கொண்ட குடும்ப அலகு' என மாற்றியமைக்க வேண்டும் என்று AINPSEF வலியுறுத்தியுள்ளது. நவீன குடும்பங்களின் உண்மையான சார்ந்திருப்பவர்கள் மற்றும் செலவினங்களை தற்போதைய முறை துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்று அந்த அமைப்பு வாதிடுகிறது.முந்தைய ஊதியக் குழுக்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்போது 3,490 கலோரி தரநிலை உள்ளிட்ட உணவுத் தேவைகள், உடை, வீட்டு வசதி மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான செலவுகள் இன்று கணிசமாக அதிகரித்துள்ளதாக ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன. எனவே, ஊதிய நிர்ணயத்தில் நவீன வாழ்க்கை முறைகள் மற்றும் தற்போதைய ஊட்டச்சத்துத் தேவைகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.புதிய ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதிய மாற்றங்களுக்கு அடிப்படையாக அமையும் ஃபிட்மென்ட் காரணி இம்முறை மிகவும் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சில ஊழியர் சங்கங்கள் 3.83 என்ற ஃபிட்மென்ட் காரணியைக் கோரியுள்ளன. தற்போதைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வை கருத்தில் கொள்ளும்போது, 7ஆவது ஊதியக் குழுவின் 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி போதுமானதாக இல்லை என்று வாதிடுகின்றன. ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக, அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வெவ்வேறு ஊதிய நிலைகளுக்கு வெவ்வேறு ஃபிட்மென்ட் காரணிகளைப் பயன்படுத்தலாம் என்று இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) பரிந்துரைத்துள்ளது.அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு முக்கிய விவகாரமாக உள்ளது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 60 சதவீதத்தை எட்டியுள்ளது. பல ஆண்டுகளாகத் திரண்ட பணவீக்கத்தின் தாக்கத்தைப் புதிய ஊதியக் கட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்றும், புதிய ஊதியக் கட்டமைப்பிற்கு மாறும்போது ஊழியர்கள் அகவிலைப்படி பலனை இழக்கக்கூடாது என்றும் தேசிய கவுன்சில்-கூட்டு ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.8ஆவது ஊதியக் குழுவின் முன் ஓய்வூதியச் சீர்திருத்தமும் ஒரு முக்கிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை AINPSEF மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ளது போல சந்தை சார்ந்த வருவாயை மட்டுமே சார்ந்திருக்காமல், ஓய்வுக்குப் பிந்தைய வருமானம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
