இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கின்றன. அதில் பல செய்திகள் போலியாகப் பரப்பப்படுகின்றன. இந்நிலையில், ரூபாய் நோட்டுகள் தொடர்பான ஒரு போலியான செய்தி இப்போது பரவிக் கொண்டிருக்கிறது. 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகள் நாளை (ஜூலை 1) முதல் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல் குறித்து பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு ரூ. 10, ரூ. 20, ரூ. 50 மற்றும் ரூ. 100 நோட்டுகளைத் திரும்பப் பெறுமாறு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி சுற்றறிக்கை அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இது ஒரு வகையான 'அறிவிக்கப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கை' குறித்த கவலைகளை எழுப்பியது. சில பழைய நோட்டுகளைச் செல்லாததாக்க வங்கி உத்தரவிட்டதாகவும், மற்ற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம் என்றும் சில செய்திகள் கூறின. இருப்பினும், வங்கியின் விளக்கம் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி, இவ்வாறு பரவி வரும் செய்தி தவறானது என்று கூறியுள்ளது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இச்செய்திகளைப் போலியானவை என்று நிராகரித்ததுடன், எந்தவொரு நோட்டும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிக் கிளைகளில் 2005க்கு முந்தைய ரூ. 10, ரூ. 20, ரூ. 50 மற்றும் ரூ. 100 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இந்தத் தகவல் தவறானது என்று பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தெளிவுபடுத்துகிறது. வாடிக்கையாளர்கள் இத்தகைய செய்திகளை நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம். துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பதிவில் #FakeMessageAlert (போலிச் செய்தி எச்சரிக்கை) என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், 2005க்கு முந்தைய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளின் புழக்கம் கணிசமாகக் குறைந்துவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது. மேலும் மக்கள் தேவைப்பட்டால் அவற்றை மாற்றிக்கொள்ளவும் அனுமதித்திருந்தது. இருப்பினும், இந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் சட்டப்பூர்வமான பணமாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாகக் கூறியிருந்தது. ள்ள நோட்டுகளைத் தடுக்கும் வகையில் புதிய நோட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. பழைய நோட்டுகளைச் செல்லாததாக்குவதற்கான எந்தத் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி ஒருபோதும் அறிவிக்கவில்லை. இதற்கு மாறாகப் பரவும் தகவல் தவறானது என்பதை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

