நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பேரழிவை ஏற்படுத்தும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலாச் சென்ற வெளிநாட்டினரின் நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலின்படி, 291 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 384 சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.
இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 57 சுற்றுலாப் பயணிகள் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களைத் தொடர்புகொள்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்களைப் பத்திரமாக மீட்கவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் இந்தியத் தூதரகமும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.