நேபாள நாட்டின் ராசுவா மாவட்டத்தில் அமைந்துள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக அப்பகுதியே பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 162 ஆக உயர்ந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடிப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் தமிழர்களும் சிக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களைப் பாதுகாப்பாக மீட்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு, தமிழர்களை விரைவாக மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள சிறப்பு உதவி எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், அங்குள்ள தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.