நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து அந்நாட்டு அரசுக்கு சீனா உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிவிட்டதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் உருவான வெள்ளத்தின் பின்னணி குறித்து சீனா இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து நேபாள அதிகாரிகள் கூறுகையில், “திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கான மூலக் காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், இதுவரை அவர்களாலும் வெள்ளப் பெருக்கிற்கான சரியான காரணத்தைக் கூற முடியாத நிலையே நீடிக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் நிலவும் இயற்கை சீற்றங்கள் குறித்து அண்டை நாடுகளுக்கு முன்னரே எச்சரிக்கை விடுப்பது வழக்கம் என்ற நிலையில், சீனா முறையான தகவல் தெரிவிக்காததால் நேபாள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.