நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகச் சீனா மீது புதிய சர்ச்சை உருவெடுத்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாக நேபாளத்திற்குச் சீனா உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தரப்பில் பேசுகையில், “இந்த வெள்ளத்திற்கான முதன்மை காரணம் என்ன என்பது குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இதுவரை இதற்கான தெளிவான காரணத்தைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. மேலும், இந்தச் சம்பவம் நேபாள எல்லைக்குள் உருவானதா அல்லது திபெத் பகுதியை நோக்கி நிகழ்ந்ததா என்பதும் கூட இதுவரை உறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் நிலவும் நீர்நிலைகளின் நிலை மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து இரு நாடுகளும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், இந்த திடீர் வெள்ளம் குறித்த சீன அதிகாரிகளின் தெளிவற்ற பதில் நேபாள மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.