நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து நேபாள அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்க சீனா தவறிவிட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த வெள்ள பாதிப்புகள் தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.
இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், “இந்த வெள்ளத்திற்கான துல்லியமான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், இதுவரை வெள்ளப் பெருக்குக்கான மூலக் காரணம் என்ன என்பதை அவர்களாலும் தெளிவுபடுத்த முடியாத நிலையே நீடிக்கிறது. மேலும், இந்தச் சம்பவம் நேபாள நிலப்பரப்பில் நடைபெற்றதா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
திபெத் எல்லைப் பகுதியில் இருந்து பாயும் ஆறுகளால் நேபாளத்தில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது இரு நாடுகளுக்கு இடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இருநாட்டு உயரதிகாரிகளும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.