நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் சேதமடைந்துள்ளன. இந்த பேரழிவிற்கு இடையே, வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கி இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு நடுவே ஒரு பச்சை நிற வீடு மட்டும் உறுதியாக நின்ற விசித்திரமான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீட்டின் பால்கனியில் ஒரு குழுவினர் சிக்கிக்கொண்டு, வெள்ளத்தின் நடுவே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். சுற்றிலும் இருந்த கட்டிடங்கள் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தபோதிலும், இந்த பச்சை நிற வீடு வெள்ளத்தின் வேகத்தைத் தாங்கி நின்றது. பால்கனியில் நின்றிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்ற பதற்றம் நிலவிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உயிர்தப்பியுள்ளனர்.
இந்த பரபரப்பான காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயற்கை சீற்றத்தின் நடுவே நிகழ்ந்த இந்த அற்புதம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.