உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் போலி மருந்துகளைத் தயாரித்து, மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்து வந்த மூன்று பேரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தினர் (FDCA) இணைந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் பிற மாநிலங்களுக்கும் தங்களது போலி மருந்து விநியோக நெட்வொர்க்கை விரிவுபடுத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தகைய போலி மருந்துகள் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. போலி மருந்துகளைக் கண்டறிய மருந்துப் பொட்டலங்களின் அச்சுத் தரம், பிராண்ட் பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைகள் மற்றும் கியூ ஆர் (QR) கோடு போன்றவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும், மருந்தின் தொகுதி எண் (Batch Number), உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். எப்போதும் உரிமம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே முறையான ரசீது பெற்று மருந்துகளை வாங்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.