சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் கொடூர வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 9 நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் அதிகாரிகளும், குடும்பத்தினரும் பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்பு எல்லையை இழந்த தொழிலாளர்களில் இந்தியர்களும் அடங்குவர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பால் அப்பகுதி முற்றிலும் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது நேபாள மீட்புப் படையினரும், இராணுவத்தினரும் அங்குப் பலத்த போராட்டத்திற்கு இடையே மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாகச் சீரமைப்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இந்தியர்களின் நிலையைக் கண்டறிய இந்திய வெளியுறவு அமைச்சகமும் நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்து தூதரக ரீதியாகப் பேசி வருகிறது.