சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நீர்மின் திட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். குறிப்பாக, 10 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் 40 இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேர் வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் 9 பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதாலும், கனமழை நீடிப்பதாலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதில் கடும் சிரமம் நிலவுகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க நேபாள இராணுவமும் மீட்புக் குழுவினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, நேபாள அரசுடன் இணைந்து இந்தியர்களின் பாதுகாப்புக்கான மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருகிறது.