மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ‘எஃப்.கியூ.எல்’ என்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் முதலீடு செய்த சிலருக்குக் கூறியபடி பணத்தைத் திரும்பக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த மோசடி கும்பல், அதை வைத்து மேலும் ஆயிரக்கணக்கான மக்களை வலையில் வீழ்த்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசையில், பொதுமக்கள் பலர் தங்களது சேமிப்புப் பணம், நகை மற்றும் கடன் வாங்கி இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.
தற்போது அந்தச் செயலி திடீரென முடக்கப்பட்டு, அதன் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளதால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களை மொய்க்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆன்லைனில் அதிக லாபம் தரும் போலி செயலிகளை நம்பி பணத்தைச் செலுத்த வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.