ஆந்திர மாநிலம் குண்டூர் நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவர், பழிக்குப்பழியாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் நகரம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த இவர், 20 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார். சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகத் தலைமறைவான அவர், 20 ஆண்டுகளாக ஊர் பக்கமே வராமல் குடும்பத்துடன் வேறு இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தனது சித்தப்பா இறந்த செய்தியைக் கேட்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அவர் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த எதிர்த்தரப்பினர், மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னேயே அவரைச் வளைத்துப்பிடித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகரம்பாளையம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.