ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் தலைநகரான ‘கீவ்’ மீது ரஷ்ய இராணுவம் புதிய மற்றும் கொடூரமான தாக்குதல் உத்தியைக் கையாண்டு வருகிறது. இரவு முழுவதும் இடைவெளியின்றி நடத்தப்படும் இந்த வான்வழித் தாக்குதல்களால் உக்ரைன் மக்கள் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் குறித்துப் பேசியுள்ள கீவ் நகர மக்கள், “நாங்கள் தூங்கத் தொடங்குவதற்குள் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் வந்துகொண்டே இருக்கின்றன. வெறும் 4 நிமிட அவகாசத்திற்குள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது சாத்தியமற்றதாக உள்ளது. இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க முடியாமல், மறுநாளில் ஜாம்பிகளைப் போல நடமாடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தங்களது வேதனையைப் பகிர்ந்துள்ளனர்.
உக்ரைன் மக்களின் மனவலிமையையும் இயல்பு வாழ்க்கையையும் முற்றிலும் சீர்குலைத்து, அவர்களைத் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோக்கிலேயே ரஷ்யா இந்தத் தொடர் இரவுத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகப் போர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவின் இந்த புதிய தாக்குதல் உத்தியால் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளது.