தேர்தல் களத்தில் நேரடியாகப் போட்டியிடாத பல அரசியல் கட்சிகள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்று வருவது பிபிசி புலனாய்வு ஆய்வில் அம்பலமாகியுள்ளது. சுறுசுறுப்பான தேர்தல் அரசியலில் ஈடுபடாத இந்தக் கட்சிகளுக்கு, இவ்வளவு பெரிய தொகைகள் எவ்வாறு கிடைக்கின்றன? அந்தப் பணம் எதற்காகச் செலவிடப்படுகிறது? என்ற கேள்விகள் தற்போது வலுத்துள்ளன.
இது குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள், இந்த அமைப்புகள் உண்மையில் அரசியல் நோக்கத்திற்காகச் செயல்படுகின்றனவா அல்லது கருப்புப் பணத்தைச் சட்டப்பூர்வமாக மாற்ற உதவும் ‘ஷெல்’ நிறுவனங்களின் முகமூடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற பலத்த அய்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி, வரிவிலக்கு பெறவும் சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகளுக்காகவும் மட்டுமே இத்தகைய போலி அரசியல் கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.