இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இருப்பினும், எல்லை மீறிய செல்போன் பயன்பாடு மனித உடலுக்குப் பல்வேறு கடுமையான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்துவதால் கழுத்து வலி மட்டுமின்றி, கை மற்றும் கால்கள் செயலிழக்கும் அபாயமும் நிலவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, சமீப காலமாக கழுத்து வலி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மனித உடலில் ஏற்படும் தசை மற்றும் எலும்பு மண்டலம் சார்ந்த வலிகளில் 8.2% முதல் 90% வரையிலான பாதிப்புகள், தொடர்ந்து திறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்படுத்துவதாலேயே ஏற்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் தலையைக் குனிந்தபடி செல்போனைப் பார்ப்பதால், கழுத்து நரம்புகள் மற்றும் தண்டுவடத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது நாளடைவில் கை, கால்களில் உணர்ச்சியின்மை மற்றும் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, செயலிழப்பிற்கு வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்தி, சரியான முறையில் அமர்ந்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.