சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தின் முன்பாக, காவல் ஆய்வாளர் ஒருவர் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர், மறுநாளே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி ஊடகங்களைச் சந்தித்த பிரதீப் ராஜ், “என்னைத் தொடர்பு கொண்ட காவல் ஆய்வாளர், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி விசாரணைக்கு அழைத்தார். அதற்கு ஆதாரம் கேட்டபோது, என்னைக் கொன்று திருச்செந்தூர் கடலில் கரைத்துவிடுவதாகக் கூறி அச்சுறுத்தினார்” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மறுநாள் இரவு (செப்டம்பர் 9) பிரதீப் ராஜ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார் தெரிவித்த மறுநாளே இளைஞர் கொடூரமாகக் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.