சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளில், தமிழக அரசு இரண்டு முக்கியமான தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் உயர்கல்வி கட்டமைப்பில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அரசின் இந்த சட்டத் திருத்தம் உயர்கல்வியை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கே வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, எளிய மற்றும் ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிபோகும் என்றும், தமிழகத்தின் முதன்மை கொள்கையான சமூகநீதிக்கு இது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேவேளையில், இத்தகைய மாற்றங்கள் உயர்கல்வித் துறையில் உள்கட்டமைப்பையும் சர்வதேச தரத்தையும் உயர்த்த உதவும் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எனினும், இந்தச் சட்டத் திருத்தம் உண்மையிலேயே தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துமா? அல்லது கல்வியை மேலும் லாபநோக்கம் கொண்ட வணிகமாக மாற்றுமா? என்ற கேள்விகள் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.