உலக அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் சௌதி அரேபியா முதல் மூன்று இடங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படுபவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது அதிகாரப்பூர்வத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காகச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அங்குள்ள கடுமையான சட்டங்களால் தண்டிக்கப்படும் சூழலில், தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு அவர்களின் உடல்கள் வழக்கமாக சொந்தக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. உயிரிழந்தவர்களின் உடலைக்கூடக் கடைசியாகப் பார்க்க முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவிக்கும் நிலை தொடர்கிறது.
சௌதி அரேபியாவின் கடுமையான உள்நாட்டுச் சட்டங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் காரணமாகவே உடல்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்படாமல் அங்கேயே அடக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் குடும்பங்களுக்கு ஆறாத் துயரத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.