நவீன தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட் போன்களுக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் கண்ணாடிகள் (Smart Glasses) மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மெட்டா (Meta) நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள், விரைவில் நமது தெருக்களுக்கும், பூங்காக்களுக்கும் சாதாரண பயன்பாட்டிற்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் எடுப்பது, குரல் வழி கட்டளைகள் மூலம் இயங்குவது மற்றும் வீடியோ பதிவு செய்வது என பல அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவற்றின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களை ரகசியமாக வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கு இந்த கண்ணாடிகள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகளாவிய அளவில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தகைய தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கான உரிய தொழில் நுட்பங்களை மெட்டா நிறுவனம் சரியாகச் செயல்படுத்தி உள்ளதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.