
அதிமுக பொதுக்குழுவை கூட்டுவாரா ஈபிஎஸ்?
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று தவெகவில் இணைப்பு விழா நடத்தும் அளவிற்கு அதிமுகவில் இருந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிமுக பொதுக்குழுவை கூட்டி தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்த சூழலில் தான் ஒரு குடும்ப ஆதிக்கத்தின் கீழ் அதிமுகவை கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர். தனது மகன் மிதுன் பழனிசாமியை கட்சியில் அதிகாரமிக்க நபராக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்று சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தீவிர அரசியலில் மிதுன் பழனிசாமி
இது தலைப்பு செய்தியாக மாறி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சி விவாத அரங்குகளை அனல் பறக்க செய்து கொண்டிருக்கிறது. அதிமுகவின் எதிர்காலம் என்ன, தான் கட்சியின் எதிர்காலமா, திமுக vs தவெக – இதுதான் தமிழக அரசியலின் அடுத்த இருமுனைக் களமா போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மிதுன் பழனிசாமியை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என உண்மையாகவே எடப்பாடி பழனிசாமி விரும்புகிறாரா? என அதிமுகவில் விவரம் தெரிந்தவர்களிடம் சமயம் தமிழ் சார்பாக விசாரித்தோம்.
விஜய், உதயநிதி ஜெனரேஷன் மாற்றம்
- கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
- பொதுக்குழு, செயற்குழு கூட்டி 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என்று கட்சியினர் பலமுறை எடுத்துரைத்தும் உடன்படவில்லை. அதையெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன். மீண்டு வருவோம் என்று சமாளித்திருக்கிறார்.
- கட்சியில் இள ரத்தம் பாய்ச்ச வேண்டும். அவர்கள் தான் எதிர்காலம். விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என சுற்றிலும் இளைய முகங்கள் அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்க அதிமுக மட்டும் மூத்த தலைவர்களால் அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? என்று கேள்வி எடப்பாடியை பெரிதும் யோசிக்க வைத்திருக்கிறது.
- எனவே தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வரலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்.
- உடனடியாக இல்லை. தேர்தலில் நிற்க வைத்து, வெற்றி பெற செய்து கட்சி அரசியலுக்குள் கொண்டு வர விரும்புகிறார். நேரடியாக கட்சி பதவிகள் கொடுப்பதில் விருப்பமில்லை.
மிதுன் பழனிசாமியின் விருப்பம் இதுதான்
மிதுனை பொறுத்தவரையில் கட்சியின் நிதி தொடர்பான விஷயங்களில் தான் இதுவரை முக்கிய பங்காற்றி இருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை களத்தில் உரிய திட்டமிடல்களை மேற்கொண்டு கச்சிதமாக செயல்படுத்தியுள்ளார். இந்த சூழலில் , இளைஞரணி என சிறிய பொறுப்புகள் மூலம் படிப்படியாக அதிமுகவில் முக்கியத்துவம் பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் மிதுனிற்கு தனது தொழிலில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதில் தான் ஆர்வம்.
அவசரப்படும் அதிமுக ர. ர. ,க்கள்
டெல்லியில் பவர் சென்டர்களாக இருக்கும் பல முக்கிய தலைகளின் வியாபாரம் தமிழகத்தில் இருக்கிறது. அவர்களுடன் இணைந்து தொழில் வளர்ச்சியில் அடுத்தகட்டத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே அரசியலில் ஆளுமை செலுத்தும் அளவிற்கு தன்னை இதுவரை வளர்த்து கொள்ளவில்லை. இப்படியான சூழலில் உடனடியாக அதிமுகவிற்குள் பவர் சென்டராக உருவெடுப்பார் எனவும், தலைமை பதவியை நோக்கி நகர்வார் எனவும் சொல்லிவிட முடியாது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் மிதுன் விஷயத்தில் மிகவும் அவசரப்படுகிறார்கள் என்கின்றனர்.
