தலைமைச் செயலகத்தில் கேக்
முதலமைச்சர் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு நேரில் வாழ்த்து கூறக் குவிந்திருந்தனர். முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கேக்ஒன்று அவைக்குள் கொண்டு வரப்பட்டது.அனைவரும் கேக் வெட்டும் கொண்டாட்டத்திற்காகக் காத்திருந்த வேளையில்தான், முதலமைச்சர் விஜய் அந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது.
கொண்டாட்டத்தை ரத்து செய்ய வைத்த திருவள்ளூர் நச்சு வாயு விபத்து!
முதல்வர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்ததற்குப் பின்னால் ஒரு சோகமான பின்னணி உள்ளது. நேற்று [ஜூன் 21, 2026], திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென அமோனியா நச்சு வாயு கசிவு (Ammonia Gas Leak) ஏற்பட்டது.இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கி 5 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
மக்களைத் தவிக்க விட்டு கேக் வெட்ட முடியாது - நெகிழ்ந்த அதிகாரிகள்
தொழிற்சாலை விபத்து மற்றும் தொழிலாளர்களின் மரணம் குறித்த விரிவான அறிக்கை இன்று காலை முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு வந்தது.மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நச்சு வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருக்கும் போது, தான் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டி ஆடம்பரமாகப் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இப்போதைக்கு கேக்கெல்லாம் வெட்ட வேண்டாம், அதை அப்படியே திருப்பி அனுப்பிடுங்க என்று உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு நில்லாமல், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அவசர உதவிகள் மற்றும் உயர்தர சிகிச்சைகளை உடனடியாகக் கவனிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விபத்து நிவாரணப் பணிகளில் அதிகாரிகளை முடுக்கிவிட்டார்.
மக்கள் மத்தியில் குவியும் பாராட்டுக்கள்
பிறந்தநாள் கொண்டாட்டங்களை விட மக்களின் உயிரும் துயரமுமே முக்கியம் என நினைத்து முதலமைச்சர் விஜய் எடுத்த இந்த மனிதநேயமிக்க முடிவு, அரசு அதிகாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் முதலமைச்சரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

