நேபாளத்தில் சுரங்கப்பாதைக்குள் கடந்த 9 நாட்களாகச் சிக்கித் தவித்த இரண்டு நபர்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக உள்ளே முடங்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம் மற்றும் ஆயுதமேந்திய காவல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இரவும் பகலுமாகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சுரங்கத்திற்குள் எந்தவித உணவு மற்றும் வெளிச்சமும் இன்றி 9 நாட்கள் கழிந்த நிலையில், மீட்புப் படையினருக்கு உள்ளிருந்து மனிதக் குரல்கள் கேட்கத் தொடங்கின. இந்தச் சத்தம் மீட்புக் குழுவினருக்கு ஒரு புதிய நம்பிக்கைக் கீற்றாக அமைந்தது. இதையடுத்து மீட்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்திய ராணுவத்தினர், சுரங்கப் பாதையைத் தோண்டி உள்ளே உயிருடன் இருந்த 2 பேரையும் பத்திரமாக வெளியே மீட்டனர். 9 நாட்களுக்குப் பிறகு இத்தகைய அற்புதம் நிகழ்ந்திருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே அளப்பரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீட்கப்பட்ட இருவருக்கும் தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மீட்புக் குழுவின் இந்தச் சாதனைக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.