திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் திமுக மீது குற்றச்சாட்டுகளை வைக்க துவங்கியுள்ளனர். இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் திமுக ஆட்சியை விமர்சித்து பேசினார் வைகோ. இந்நிலையில் அவருடைய குற்றச்சாட்டு குறித்து திமுகவின் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை தேர்தல் முடிகளுக்கு பின்பாக ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக வைகோ, எம்பி துரை இருவரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதிமுக பொதுக்குழு கூட்டம் கூடிய நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து திமுக குறித்து மதிமுகவை சார்ந்த வைகோ, எம்பி துரை பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடிகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வைகோவின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில், அரசியலில் அடிக்கடி வாக்குறுதி மீறக்கூடிய ஒருவர் வைகோ. அவர் பேச்சையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.மேலும், கூட்டணியில் இருந்து போனவர்களை பற்றி கவலை இல்லை. வைகோ அரசியலில் ஒவ்வொரு முறை எப்படி வேஷம் போட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். கூட இருந்த கட்சிக்காரர்கள் எல்லாம் போய் அரசியல் அனாதை ஆக்கப்பட்டுள்ளார். அந்த விரக்தியின் காரணமாக புலம்புகிறார். புலம்பிட்டு போகட்டும் என்றார் ஆர்.எஸ். பாரதி. தொடர்ந்து அவரிடம் மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என விஜய் சொன்னது குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு விஜய் குதிரை பேரம் செய்தார் என்பதற்கு அப்ரூவராக மாறி விட்டார் வைகோ. இன்னும் பல வேடிக்கைகள் இருக்கும். நிறைய விஷயங்கள் வெளியே வரும் என்றார். அதோடு போனவர்களை பற்றி பேசுவதால் நிறைய விஷயங்கள் டைவர்ட் ஆகிருது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அவ்வளவு நடக்கிறது. அரசாங்கம் செய்யும் தவறுகளை பற்றி பேசாமல் திசை திருப்புவதற்காக இதெல்லாம் பெரிய விசயமாக பேசப்படுகிறது. எனவே அதைப்பற்றி எல்லாம் பேச வேண்டும். வைகோ குறித்தெல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள் என கூறினார் ஆர்.எஸ். பாரதி.அதோடு 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திமுகவின் வியூகம் என்னவாக இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் இந்த எண்ணிக்கை கூடலாம். எதுவாக இருந்தாலும் தலைவர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். யாருடன் கூட்டணி என்பது குறித்து தெளிவாக முடிவு எடுப்பார். மக்கள் செய்த தவறுகளுக்காக வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் எங்கள் பக்கமாக திரும்புகிறார்கள். தலைவர் சரியான முடிவினை எடுப்பார் என தெரிவித்தார்.அதோடு அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, தேர்தல் சமயத்தில் தான் அதுப்பற்றி எல்லாம் சொல்ல முடியும் என பதிலளித்தார். சீமான் பொது வேட்பாளாராக நிறுத்தப்படுவாரா என்பதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். அவருடைய இந்த பேட்டி தற்போது கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

