52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மக்களுக்கு செய்யும் துரோகம்.. – தவெகவுக்கு தேவையில்லாதது- கார்த்தி ப. சிதம்பரம்

சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் பேசியதாவது: அயோத்தி கோவில் கட்டுமானம் அரசின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், நாடு முழுவதும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த நிதி திரட்டல் பணிகளில் அரசுடன் தொடர்புடையவர்களே ஈடுபட்டிருந்ததாகவும் கூறினார்.

தனியார்மயமாக்க பாஜக முயற்சி

தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தனியார்மயமாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். பொதுமக்களிடம் இருந்து நிதி பெறப்படும் கோவில்கள் அரசின் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார். அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணையும், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணையும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்த அவர், தற்போது உள்ளூர் காவல்துறை மட்டுமே நடத்தி வருவது வருத்தமளிப்பதாக கூறினார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜகவின் உண்மையான முகத்தை இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் விமர்சித்தார். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்ததால் அதிமுக தலைமையின் மீது நம்பிக்கை இழந்த சிலர் கட்சியை விட்டு வெளியேறி வருவதாக தெரிவித்தார். அதிமுக போன்ற பாரம்பரியமான கட்சி தொடர்ந்து வலுவாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறினார்.

தவெகவில் புதிய எம்.எல்.ஏக்களை சேர்ப்பது தேவையில்லாதது..

காங்கிரசில் யாரும் இணையாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிகாரத்தில் இருக்கும் கட்சியிடமே அரசியல்வாதிகள் செல்வது இயல்பானது என்றும், தற்போதுயில் இல்லாததே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்தார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய எம்.எல்.ஏ.க்களை சேர்க்கவோ, யாரையும் விலைக்கு வாங்கவோ தேவையில்லை; தற்போதைய கூட்டணியுடனேயே ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார். திமுக கூட்டணியின் ஆதரவால் தான் வெற்றி பெற்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணியில் ஒவ்வொரு கட்சியின் வாக்குகளும் மற்றொரு கட்சியின் வெற்றிக்கு பங்களிக்கின்றன என்றார். தனது வெற்றி திமுக கூட்டணியால் கிடைத்தது என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் திமுகவிற்கு எந்தவித துரோகமும் செய்யவில்லை என்றும், மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறினார். 'சிங்கப் பெண் படை' குறித்து பேசிய அவர், பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்த நபர்களிடையே நடைபெறுவதால், அவற்றை எந்த காவல்துறையாலும் முன்கூட்டியே தடுக்க முடியாது என்றார்.

மாணிக்கம் தாகூருக்கு தனது வாழ்த்து

ஆனால் சம்பவத்திற்குப் பிறகு விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் பெண்களை மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசு முதலில் பட்ஜெட்டை தாக்கல் செய்து திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த வழக்கறிஞர்களுக்குக் கூட இதுவரை பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். சிறைகளில் உளவியல் ஆலோசகர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்ற அவர், சிறையிலிருந்து வெளியே வருபவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதுபோன்ற ஆலோசனைகள் சமூக மாற்றத்திற்கு அவசியமானவை என்றும் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த விவகாரம் முடிவடைந்துவிட்டது என்றும், புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *