
மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்த முன்னாள் நிர்வாகி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக-வில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மரகதம் குமரவேல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரூ.20 கோடி கொடுத்து ராஜ்யசபா சீட் வாங்கியுள்ளனர்
பேச்சின் போது அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தனபாலை விமர்சித்த மரகதம் குமரவேல், "தொண்டர்களுக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்காதவர்கள் இன்று கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பதவிகளை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. ரூ.20 கோடி கொடுத்து ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெற்றதாக கட்சிக்குள்ளேயே பேசப்படுகிறது" என்று கூறினார்.
திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது யார்?
மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததாகவும், "இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்தவர் எம்ஜிஆர். அந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக சிலர் செயல்பட்டனர்" என்றும் தெரிவித்தார்.
என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள்
தான் தவெகவில் இணைந்ததற்காக ரூ.50 கோடி பெற்றதாக அதிமுகவினர் பரப்புரை செய்து வருவதாக குற்றம்சாட்டிய மரகதம் குமரவேல், "என் வீட்டில் எந்த நேரத்திலும் ரெய்டு நடத்தலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று சவால் விடுத்தார்.
நான் வெற்றி பெறக்கூடாது என வேலை பார்த்தனர்
தொடர்ந்து பேசிய அவர், "நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக நிர்வாகிகள் சிலர் செயல்பட்டனர். மாவட்ட செயலாளர் ஒருவர் திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக தகவல்கள் வந்தன. குதிரை பேரம் செய்தது தவெக அல்ல. உண்மையில் குதிரை பேரம் நடத்தியது ஈபிஎஸ்தான்" என்று குற்றம்சாட்டினார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
மதுராந்தகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் மரகதம் குமரவேல் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், அவரது குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.
