
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூன் 18) காணொளி மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையேற்றார். தமிழக அரசின் அரசாணை 111 தொடர்பாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் P.பிரடெரிக் எங்கெல்ஸ் முன்மொழிவை வைத்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துகளுக்குப் பின்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.செல்வகுமார் தொகுப்புரையாற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் நன்றி கூறினார். கூட்டத்தில் கீழ்கண்ட முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தவெக தனது தேர்தல் அறிக்கையில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அமல்படுத்தபடும் என்று தெரிவித்தற்கு மாறாக திட்டத்தை அமல்படுத்தும் விதமாக அரசாணை 111 வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் அறிக்கைப் படி TAPS திட்டத்தை ஒழித்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வரும் திங்கள் அன்று (ஜூன் 22) மாநிலம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஜூலை 15ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கூட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. TAPS திட்டம் தொடர்பாக ஜனவரி மாதம் வெளியிட்ட அரசாணை எண் 7, ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அரசானை எண்.7-ல் ஓய்வு பெறும் போது கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீத ஊதியம் மற்றும அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை எண் 111-இல் ஓய்வு பெறும் போது ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 30 சதவீதம் ஊதியம் மற்றும் அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த முரண்பாடு என்றும், தமிழக அரசு விளக்கம் அளிக்குமா என்றும் அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தேர்தல் சமயத்தில் திமுக ஆட்சியால் அறிவிக்கப்பட்ட TAPS திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக பரிசீலிப்போம் என்று த.வெ.க உறுதியளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் திசையில் செல்லாமல் TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை மட்டுமே செய்துள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் கண்டனர் தெரிவித்துள்ளனர். இது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். TAPS திட்ட விஷயத்தில் தமிழக அரசு விரைவில் ஒரு முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய திமுக அரசின் ஆட்சியிலும் சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக கடைசி வரையில் காத்திருந் தனர். இப்போது திமுக ஆட்சியில் இல்லை. புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், அதை அரசு காப்பாற்றுமா அல்லது ஏமாற்றம் கொடுக்குமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
