
எம்.ஜி.ஆர் திரைப்பட நிறுவனத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் சென்னை தரமணி எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (MGR Government Film and Television Training Institute) இந்தியாவின் புகழ்பெற்ற திரைக்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்களை உருவாக்கவும், மாணவர்களைத் தேர்வு செய்யவும் ஒரு பிரத்யேக ஆலோசனைக் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது.இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய இந்த உயர்மட்டக் குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம்பெறவில்லை.
புதிய குழு நியமனம்
புதிய தலைவராக மனோஜ் பரமஹம்சா நியமனம்தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த புகழ்பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 'ஈரம்', 'நண்பன்', 'பீஸ்ட்', 'லியோ' உள்ளிட்ட பல பிரம்மாண்ட திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா இந்த நிறுவனத்தின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
10 பேர் கொண்ட புதிய மாணவர் சேர்க்கைக் குழு
திரைப்படப் படிப்புகளுக்கான புதிய மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உயர்மட்டத் தேர்வுக் குழுவிற்குதிரைத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 10 முன்னணி ஆளுமைகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இயக்குநர்கள்: வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு
- ஒளிப்பதிவாளர்கள்: விஜய் மில்டன், வேல்ராஜ்
- படத்தொகுப்பாளர்கள்: ஏ. ஸ்ரீகர் பிரசாத், ராமர்
- கலை இயக்குநர்: முத்துராஜ்
- ஒலிப் பொறியாளர் (Sound Engineer): சிவகுமார்
- வண்ண வடிவமைப்பாளர் (Colorist): பாலாஜி
அங்கீகாரத்தை அரசே உறுதி செய்ய வேண்டும் - கனிமொழி எம்பி
இந்த விவகாரம் குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசுக்கு நேரடியாகவே சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.அவரது பதிவில், "தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை.பல சவால்களைக் கடந்து திரைத்துறையில் கலைஞர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்." என மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.திரைத்துறையில் மாணவிகள் சேர்க்கை, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சினிமா சார்ந்த பாடத்திட்டங்களை வடிவமைக்கும் ஒரு முக்கியக் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவம் (Women Representation) முற்றிலும் தவிர்க்கப்பட்டது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குழு மாற்றியமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திரைத்துறையில் இயங்கும் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) போன்ற அமைப்புகள் திரைத்துறையில் பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசின் இந்த குழுவமைப்பு பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இருப்பினும், கனிமொழி எம்பியின் இந்த பகிரங்கமான சுட்டிக்காட்டுதலை அடுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, முன்னணி பெண் இயக்குநர்கள் அல்லது பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தக் குழுவில் இணைத்து மாணவர் சேர்க்கைக் குழுவை விரைந்து மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
