
தமிழ்நாட்டில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை முறைப்படுத்தி நிரந்தரமாக்க கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே கல்வித் தகுதியோடு ஒரே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரி சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிக்கலை வாழ்க்கைக் கல்வி ஆகிய பாடங்களுக்காக அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந் த 2011ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சட்டசபை 110-ன் அறிவிப்பின்படி பணியிடங்கள் ஏற்படுத்தி நியமித்த பகுதி நேர ஆசிரியர்களை உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக் கல்வி ஆகிய பாடங்களில் தமிழக அரசு செய்து காலமுறை சம்பளம் வழங்கி இருக்க வேண்டும்.ஆனால் 15 கல்வியாண்டுகள் முடிந்தும் கூட தற்காலிகமாகவே வைத்து ரூ. 15,000 சம்பளம் தொகுப்பூதியத்தில் முடக்கி வைத்துள்ளது. ஆனால் இதே பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை சம்பளத்தில் நியமித்தவர்களுக்கு பணிக் காலத்திற்கேற்ப 60 ஆயிரம், 70 ஆயிரம், 80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தற்காலிக பணியாளர்களுக்கும், நிரந்தரப் பணியாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.தமிழக அரசு இதனை பின்பற்றி ஒரே கல்வித் தகுதியோடு ஒரே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களுக்கும், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளத்தை வழங்க வேண்டும். 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை முறைப்படுத்தி நிரந்தரமாக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தவெக தேர்தல் அறிக்கையில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்து இருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்ற வாக்குறுதிபடி அளிக்கப்பட்டது.தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகள் என்பதையும் கடந்து பல ஆண்டுகளாக அதாவது 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதி நேர ஆசிரியர்களை உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களில் நிரந்தரமாக்க வேண்டும். இதற்காக அரசு சிறப்பு மசோதா தாக்கல் செய்ய வேண்டும். 11,773 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது தவெக அரசின் கொள்கை முடிவு என அறிவிக்க வேண்டும். முதல்வர் விஜய் முதலாவது சட்டசபை கூட்டத் தொடரில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
