
7 பேர் பலியான சோகம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக அம்மோனியா நச்சு வாயு கசிந்தது. இந்த வாயுவை சுவாசித்ததால் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோர விபத்து குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களைக் காக்க சிறந்த சிகிச்சை தருக - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
வாயு கசிவு விபத்து காரணமாக 74-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் தொழிலாளர்களின் நலன் குறித்து கவலை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தொழிற்சாலை பாதுகாப்பு நெறிமுறைகள்: தொடர் ஆய்வுகள் தேவை
தமிழகத்தில் சமீபகாலமாக தொழிற்சாலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசுக்கு ஒரு முக்கிய அறிவுறுத்தலையும் இபிஎஸ் விடுத்துள்ளார்.தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இந்த அரசு வெறும் தற்காலிக நடவடிக்கையாக பார்க்காமல், தொடர் ஆய்வுகள் மூலம் எப்போதும் உறுதிசெய்திட வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆலை நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
