சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக கூட்டணி மாற்றம், கட்சி தாவுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதனிடையில் தேர்தலுக்கு முன்பாக பாமகவில் தந்தை, மகன் இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இன்றைய தினம் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துள்ளார் அன்புமணி. இதன் காரணமாக இருவருக்குள்ளும் நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாமக நிறுவனர் , அவரது மகன் அன்புமணிக்கு இடையில் கடுமையான அதிகார மோதல் நிலவி வந்தது. இதனால் கட்சிக்குள் உட்கட்சி பூசல் பெரியளவில் வெடித்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்டது. அவருக்கு எதிராக ராமதாஸ், சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தொடர்ந்து அன்புமணியின் துரோக கூட்டத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் பரபரப்புரைகளில் பேசினார். இதனிடையில் ராமதாஸ் தரப்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதே நேரம் அன்புமணி தரப்பு பாமக நான்கு இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. இப்படியான நிலையில் இன்றைய தினம் ராமதாஸ் திருமண நாளை முன்னிட்டு அவரை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் சென்று சந்தித்தார் அன்புமணி. அவருடன் மனைவி சௌமியா, இரண்டு மகள்கள் ஆகியோரும் சென்றிருந்தனர்.ராமதாஸ், அன்புமணி இருவரும் மனக்கசப்புகளை தாண்டி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்டனர். இந்த நெகிழ்ச்சி சந்திப்பு பாமகவினர் மத்தியில் உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பாமக கெளரவ தலைவர் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி நேரில் சந்தித்து பேசியுள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதனை நான் வரவேற்கிறேன். நானும் இப்போ தைலாபுரம் நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறேன். இன்று ராமதாஸின் 60-வது திருமண நாளன்று அன்புமணி, சௌமியா இருவரும் அவரை வந்து சந்தித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குடும்பம் ஒன்றாக இணைந்துள்ளது ஒரு சந்தோஷம். அதோடு பாமக மீண்டும் ஒரு வலிமையான இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பாக தான் இதனை பார்க்கிறோம். கடந்த ஆறு மாதமாக இதற்காக நாங்கள் முயற்சி செய்தோம். இந்த பிரிவு வந்து விடக்கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டுமென நாங்கள் நினைத்தோம். இருந்தாலும் அசாதரண சூழ்நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. முன்னாடியே இப்படி ஒன்று நடந்து இருக்கலாம்.ஆனாலும் காலம் கடந்து இப்படி ஒரு விஷயம் நடந்தாலும், அதனை நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ஜி.கே. மணி. மேலும், இந்த சந்திப்பினை நல்ல அறிகுறியாக பார்க்கிறேன். மிகுந்த மகிழ்ச்சியாகவும் உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சமீப காலமாக பாமக இரண்டு பிரிவாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதோடு இந்த சந்திப்பு பற்றி அன்புமணி செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று அப்பா அம்மாவின் திருமண நாள். நானும் எனது மனைவி குடும்பத்தினருடன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டோம். இனி நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது.

