அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி படுமோசமாக சொதப்பி, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதுவரை, அயர்லாந்துக்கு எதிரான 9 டி20 போட்டிகளில் விளையாடி, அதில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளனர்.பேட்டிங்கில் சொதப்பல்: 183 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், பேட்டர்கள் சிறப்பாகவே செயல்படவில்லை. டாப் ஆர்டர் பேட்டர்கள் பந்தை, தூக்கியடிக்க மட்டுமே முற்பட்டனர். ஐபிஎலில் பவுன்ஸ் இருக்காது, ஸ்விங்கும் அதிகம் இருக்காது. அயர்லாந்தில் அப்படி இருக்காது எனத் தெரிந்தும், தொடர்ச்சியாக டாப் ஆர்டர்கள் பேட்டர்கள் பந்தை தூக்கியடிக்க பார்த்து அடுத்தடுத்து, விக்கெட்டை பறிகொடுத்தனர்.மேலும், சமீப காலமாகவே பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியாமல் தடுமாறும் திலக் வர்மாவுக்கு, பினிஷர் ரோல் கொடுக்கப்பட்டது. அவர், 90.48 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ஆடினார். இப்படி, பேட்டிங் மொத்தமும் சொதப்பியது.இதற்கு, வைபவ் சூர்யவன்ஷிக்கே வாய்ப்பு கொடுத்திருக்கலாம். என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இரண்டாவது போட்டியில், வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பதில் அளித்துள்ளார்.முதல் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த ஷ்ரேயஸ் ஐயரிடம், ‘அடுத்த போட்டியில் சூர்யவன்ஷியை பார்க்கலாமா?’ எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஷ்ரேயஸ் ஐயர், ‘‘டாஸ் போடும் நிகழ்வின்போதே தெரிவித்துவிட்டேன். சூர்யவன்ஷிக்கான நேரம் வரும்போதுதான், அவரை பிளேயிங் 11-ல் சேர்க்க முடியும். அதுவரை அவர், காத்திருந்துதான் ஆக வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.முதல் போட்டியில், தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்துப் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ‘‘துவக்கத்தில் சிறப்பாக பந்துவீசினோம். அதன்பிறகு, மிடில் ஓவர்களின்போதும், டெத் ஓவர்களின்போதும் சிறப்பாக செயல்படவில்லை. சைட் பவுண்டரிகளைவிட, ஸ்ட்ரைட் பவுண்டரி அளவு சிறியதாக இருந்தது. அயர்லாந்து பேட்டர்கள், அதிகமாக ஸ்ட்ரைட் பவுண்டரியை டார்கெட் செய்து, ரன்களை அடித்தனர். இதனை நாங்கள் தடுக்கவில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம்’’ எனக் கூறினார்.ஷ்ரேயஸ் ஐயர், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். இதற்குமுன், 2017ஆம் ஆண்டில், விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டி20 போட்டியில் தோல்வியை சந்தித்தார். 2022ஆம் ஆண்டில், ரிஷப் பந்தும், 2024ஆம் ஆண்டில் ஷுப்மன் கில்லும் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தார்கள்.ஒருகட்டத்தில், அயர்லாந்து அணி 51/4 என இருந்தது. இதனால், அந்த அணி 150 ரன்களை அடித்தாலே பெரிய விஷயமாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், 16ஆவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களையும், 17ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா 27 ரன்களையும் விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இப்படி, டெத் ஓவர்களில் 12 பந்துகளில் 46 ரன்கள் கசிந்ததும், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி, வரும் ஜூலை 28ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 6 மணிக்கு துவங்கும். இந்திய அணியால், கடைசியாக 2024ஆம் ஆண்டு ஜனவரியில்தான், டி20 தொடரை வெல்ல முடியாமல் போனது. அப்போது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1-1 என சமன் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

