பாமகவில் பல காலமாக நீடித்து வந்த உட்கட்சி பூசல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையில் பிரச்சனைகள் நீடித்து கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் பனிப்போர் நிலவி கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைத்து பாமக நிறுவனர் ராமதாஸை அவரது மகன் சந்தித்தார். இதன் மூலமாக பாமகவில் நிலவி வந்த பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.தமிழ்நாட்டின் பிரதான கட்சியாக இருந்த பாமகவில் கடந்த இரு ஆண்டுகளாகவே அதிகார யுத்தம் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையில் நிலவி வந்தது. இதன் காரணமாக பாமக இரண்டு தரப்பாக செயல்பட ஆரம்பித்தது. இதில் அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அதே நேரம் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து ராமதாஸ் தரப்பு பாமக போட்டியிட்டது.இதனை தொடர்ந்து அன்புமணி தரப்பு பாமக வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டுமென இராமதாஸ் பிரச்சாரங்களில் பேசி வந்தார். குறிப்பாக தருமபுரியில் தனது மருமகள் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால் அதர்மபுரியாக மாறி விடும் எனவும் அவர் பேசியது பரபரப்பினை கிளப்பியது. இப்படியான நிலையில் சமீபத்தில் தனது தந்தை ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைத்து அன்புமணி சந்தித்தார்.இந்த சந்திப்பு பாமகவினர் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு இனிமேல் பாமகவில் பிரிந்தவர்கள் இணைந்து செயல்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த இணைப்பு நடந்துள்ள நிலையில் பாமகவின் ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சேலத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராமதாஸ் ஆதரவு நிர்வாகியான பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கலந்துக் கொண்டுள்ளார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருவரும் இணைந்ததை மனமார வரவேற்கிறோம். ராமதாஸை நம்பி பயணித்தோம். பல கோடிகளை இழந்து இருக்கிறோம். எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லையே என்றார் ஏக்கத்தில் தான் பொறுப்பாளர்கள் வந்து இருக்கிறார்கள். என்ன பண்ணலாம் என்று கேட்கிறார்கள். அவர்களிடம் நீங்களே என்ன பண்ணலாம் சொல்லுங்க என்று கருத்து கேட்டுள்ளோம் என தெரிவித்தார். தொடர்ந்து தங்களுடைய முடிவினை அறிவிப்பதற்கு 2,3 நாட்களாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து ராமதாஸ், அன்புமணி இணைப்பு குறித்து கேட்கையில், அதில் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தார். அதே நேரம் இந்த இணைப்பு இரண்டு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக நடந்திருந்தால் இன்னைக்கு பாமக அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்திருக்கும். துணை முதலமைச்சர் படாவி கிடைச்சிருக்கும்.இன்னும் பல எம்எல்ஏக்கள் கிடைத்து இருப்பார்கள். எங்களுடைய வாக்கு சதவீதம் குறைந்து இருக்காது. அந்த வேதனை, வலி, வருத்தம் தான் என எமோஷனலாக பேசியுள்ளார் அருள். அதோடு எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் கடன்காரன் ஆகி இருக்க மாட்டாங்க. எங்களை நட்டாற்றில் விட்டுட்டு போயிட்டாரோ என்ற பயமும், வேதனையும் பரபரப்பு கருத்துக்களை பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.இதனை தொடர்ந்து அவரிடம் வேற கட்சி போவீங்களா, இல்லை பாமகவில் தொடர்வீங்களா என்று கேட்கப்பட்டதற்கு எல்லாமே ரெண்டு கழித்து சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். எங்களுடைய மாணவர் பருவத்தில் இருந்தே பாமக தான். வேற கட்சியெல்லாம் தெரியாது. ராமதாஸ் மட்டுமே தெரியும் எனவும் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

