விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. திமுகவுடன் நட்பு தொடருவதாக அவர் பேசியுள்ள நிலையில், தவெக கூட்டணியில் இருந்து விசிக வெளியே வர போகிறதா? மீண்டும் திமுகவுடனான கூட்டணியில் இணைய போகிறதா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, திருமாவளவனின் கருத்துக்கள் திரித்து பரப்பப்படுவவதாக தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில் கூறியுள்ளதாவது, திருமாவளவனின் கருத்துகளை திரித்து வெளியிடுவது திட்டமிட்ட அவதூறு. 'திராவிடமணி' தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .அப்போது கூட்டணி சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, கடந்த கால நிலைப்பாடுகள் குறித்து தான் பேசினார். அதனை திரித்து முரணான பொருள் தொனிக்கும் வகையில் நிகழ்கால நிலைப்பாடாக ஊடகங்கள் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் எஸ்.எஸ். பாலாஜி. தொடர்ந்து அவருடைய பதிவில், கூட்டணியை திமுக தான் முறித்தது என்று சொல்கிறீர்களே, தவெகவுக்கு நீங்கள் ஆதரவளித்த சமயத்திலே கூட்டணி முறிந்து விட்டது என்று பொருள் தானே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமாவளவன், கடந்த மே மாதத்தில் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடுகளையும், அப்போதிருந்த அரசியல் சூழல் குறித்தும் விளக்கினார். அதாவது விசிக கடந்த மே 9 ஆம் தேதி தவெக ஆட்சி அமைப்பதற்கு முடிவினை எடுத்த சமயத்தில், பின்னர் அமைச்சரவையில் சேருகின்ற முடிவினை எடுத்த போதும் திமுகவுடன் நட்புணர்வோடு தான் விசிக இருந்தோம். எங்களுடைய நிலைப்பாடுகள் குறித்து அவ்வப்போது திமுக தலைமைக்கும் தெரியப்படுத்தியும் வந்தோம் என்றார்.அதோடு தவெகவுடன் கூட்டணி அமைத்ததற்கான எந்த அதிகாரப்பூர்வமான நிகழ்வும் நடைபெறவில்லை எனவும் கூறினார். இந்த மாதிரியான சூழ்நிலையில், விசிக முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்ததன் மூலமாக விசிக, திமுகவுக்கு கூட்டணி உறவில்லை என்று திமுகவே வெளிப்படுத்தி விட்டது. அது அதிர்ச்சியாக இருந்ததாகவும் என்றும் தெரிவித்தார். அதன் காரணமாகவே விருதுகள் வழங்கும் விழாவில் அவ்வாறு பேசியதாகவும் தெளிவுப்படுத்தினார்.இங்கே நினைவில் கொள்ள வேண்டியது, யார் முதலில் கூட்டணியை முறித்து கொண்டார்கள்? என்பது தான். அதற்கு திருமாவளவனின் பதில் கூட்டணியை திமுக தான் முறித்தது என்பதாகும். கடந்த கால நிகழ்வுகளையும் - நிலைப்பாடுகளையும் கடந்த கால வாக்கியங்களில் ( Past tense) வெளிப்படுத்தினார் திருமாவளவன். ஆனால் வழக்கம் போல் அவரது கருத்துகளை 'நிகழ்கால நிலைப்பாடுகளைப்போல' சில ஊடகங்கள் திரித்து திட்டமிட்ட அவதூறுகளை பரப்புகின்றன.தொடர்ந்து இது போன்று திருமாவளவனின் கருத்துகளை உண்மைக்கு மாறாக, முரணான பொருள் தொனிக்கும் வகையில் திரித்து வெளியிடுகின்றனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு எஸ்.எஸ். பாலாஜி தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

