டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பை வென்றுகொடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இருப்பதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய, கௌதம் கம்பீர் பரிந்துரைகளை பிசிசிஐ அப்படியே ஏற்றுக் கொண்டது.கம்பீர், பரிந்துரையின் பேரில்தான் சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு, ஷ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன் பதவியை கொடுக்க பிசிசிஐ முடிவு செய்தது. ராஜத் படிதருக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க பெரும்பாலான பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்தனர். இருப்பினும், கம்பீர் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டனர். மேலும், வைபவ் சூர்யவன்ஷி, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை கம்பீர் பரிந்துரையில்தான், சேர்த்தனர்.குறிப்பாக, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தபோதும், அவரது இடத்திற்கு விரைவில் வைபவ் சூர்யவன்ஷியை கொண்டு வர வேண்டும் என கம்பீர் திட்டமிட்டுதான், சூர்யவன்ஷிக்கு அவசர அவசரமாக இடம் கொடுத்திருக்கிறார். மேலும், வேகத்திற்கு சாதகமான அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கு தரமான பௌலர்களை அழைத்து வராமல், தொடர்ச்சியாக அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை கம்பீர் தேர்வு செய்தார்.இதனால், இந்திய அணி பயிற்சியாளர் குழுவிலேயே கம்பீருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. மோர்னே மோர்கல் உட்பட சில பயிற்சியாளர் குழு ஊழியர்கள், கம்பீரின் செயல்பாடு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். குறிப்பாக, கம்பீர் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கும் சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது.கோலி, ரோஹித்தை சந்தித்தனர்: இதனால், அதிருப்தியில் இருக்கும் மோர்னே மோர்கல் உட்பட சில பயிற்சியாளர் குழு ஊழியர்கள், திடீரென்று விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இந்த விஷயம், தற்போது பிசிசிஐ வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனியர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: பிசிசிஐயில் தற்போது ஒரு குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. கம்பீர் வந்தப் பிறகு, ஒரேயடியாக சீனியர்களை புறக்கணித்துவிட்டு, இளம் வீரர்களை கொண்டு வந்திருப்பது, தவறான முடிவு என ஆலோசனை கூட்டத்தின்போது, பிசிசிஐ சீனியர்கள் நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.டெஸ்ட் பார்மெட்டில், முழுக்க முழுக்க இளம் பேட்டர்களை கொண்டு வந்து, தற்போது அணியை பலவீனப்படுத்திவிட்டோம். தற்போது, டி20 அணியிலும் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்டு வந்து, அணியை பலவீனப்படுத்த ஆரம்பித்துள்ளோம். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால், புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, ராஜத் படிதர், முகமது ஷமி போன்றவர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துதான் ஆக வேண்டும் என பிசிசிஐ சீனியர் நிர்வாகிகள், அந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில், மோர்னே மோர்கல் உட்பட சில பயிற்சியாளர் குழு ஊழியர்கள் ரோஹித்தையும், கோலியையும் சந்தித்திருப்பது, பிசிசிஐ வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இவர்கள் பிசிசிஐயிடமோ, கம்பீரடமோ அனுமதி பெற்று, ரோஹித், கோலியை சந்திக்கவில்லை.பயிற்சியாளர் குழுவில் சுதந்திரம் இல்லை, மேலும் வீரர்கள் தேர்வில், சீனியர்களை புறக்கணிப்பது குறித்தும் பேசியிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கோலி, ரோஹித்துக்கு பிசிசிஐயில் இருக்கும் சில மூத்த நிர்வாகிகள் நெருக்கமானவர்களாக இருப்பதால்தான், கோலி, ரோஹித்தை சந்தித்து முறையிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

